இடம்பெயர்ந்தோருக்கு வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு கால அவகாசம்

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வட புலத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்வதற்கு ஒருவாரகால அவகாசத்தை தேர்தல்கள் திணைக்களம் வழங்கியுள்ளது. 

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதிக்கிடையில் தமது பிரதேசங்களில் உள்ள கிராம சேவை அதிகாரிகளிடமிருந்து உரிய விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து கையளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களும் வெளிநாடுகளுக்கு நாட்டைவிட்டு வெளியேறியவர்களும் தமது பதிவை உறுதி செய்துகொள்ள முடியும்.

இந்த வாய்ப்பு 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புப் பதிவு பூரணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடம் பெயர்ந்தோருக்கான இடைக்கால வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பொருட்டே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. 

அக் காலகட்டத்தில் தமது சொந்த இருப்பிடங்களிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் மட்டுமே தமது ஆரம்ப சொந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம். ஏ. எம். நிலாம்


Add new comment

Or log in with...