யாழ். பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது.
கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும், குறித்த பெண்ணுக்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் யாழ்.பண்ணை கடற்கரை பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த வேளை திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபரை பொலிஸார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்கின்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(மயூரப்பிரியன் - யாழ்.விசேட நிருபர்)
Add new comment