முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இவ்வுத்தரவை வழங்கினார்.
இலஞ்ச ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பம் இன்றி வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிரதிவாதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையை எதிர்த்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீள்திருத்த விண்ணப்பத்திற்கு அமைய அவர்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் ஆணையம் மற்றும் ஆணையத்தின் மூன்று ஆணையாளர்களின் அனுமதியின்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 2018 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த காலத்தில், ஹீன்கெந்தவினால் ரூபா 230,984 பணத்தை தொலைபேசி கட்டணப் பட்டியலை கூட்டுத்தாபன நிதியிலிருந்து செலுத்த வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில், பிரதிவாதிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு விண்ணப்பம் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க முடியாது என, கடந்த டிசம்பர் 20ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன், அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment