புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
கட்டார், துருக்கி, லக்ஸம்பேர்க் மற்றும் ஸ்லோவேனியா நாடுகளின் புதிய தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கும் இந்த நாடுகளுக்கும் இடையே கல்வி, அபிவிருத்தி, தொழிநுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் காணப்படும் தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இதன்போது புதிய இராஜதந்திரிகளுக்கு சுட்டிக் காட்டினார்.
இலங்கையுடனான தமது நாடுகளின் நீண்டகால தொடர்புகளை புதிய துறைகளின் ஊடாக மென்மேலும் விருத்தி செய்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என புதிய இராஜதந்திரிகள் உறுதியளித்தனர்.
இன்றைய தினம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகளின் பெயர் விபரங்கள் பின்வருமாறு;
01. ஜாஸ்ஸிம் பின் ஜாபிர் ஜாஸ்ஸிம் சரூர் – கட்டார் நாட்டின் தூதுவர்
02. ரகிபே டிமெட் செகெர்சியோக்ளு – துருக்கி குடியரசின் தூதுவர்
03. ஜீன் க்ளோட் குகேனர் – லக்ஸம்பேர்க் நாட்டின் தூதுவர்
04. கலாநிதி மர்ஜன் சென்சென் – ஸ்லோவேனியா குடியரசின் தூதுவர்
05. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கடாக் – பாகிஸ்தான் குடியரசின் உயர்ஸ்தானிகர்
Add new comment