கைவிடப்பட்ட 13 பயணப் பொதிகளிலும் சிகரெட்டுகள் கண்டுபிடிப்பு
ஒரு கோடி 75 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகளை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தின் போதைத் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.
இன்று (18) காலை 8.30 மணியளவில் துபாயிலிருந்து வந்த EK 650 எனும் விமானத்தில் வந்த ஐவரிடம் மேற்கொண்ட சோதனையின்போது, அவர்களிடமிருந்து ரூபா 77 இலட்சத்து நான்காயிரம் (ரூ. 7,704,000) மதிப்புள்ள 642 அட்டைப் பெட்டிகளில் (Cartons) சிகரெட்டுகளை சுங்கத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களது பயணப் பொதிகளில் காணப்பட்ட சிகரெட்டுகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 400 (128,400) என கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள், 30, 38, 39, 40, 42 வயதுகளையுடைய குருணாகல் பிரதேசத்தைக் சேர்ந்தவர்கள் என சுங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளரும் சுங்க அத்தியட்சகருமான லால் வீரகோன் தெரிவித்தார்.
இதையடுத்து, பயணப் பொதிகள் வந்திறங்கும் பகுதியில் (belt area) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 13 பயணப் பொதிகளை சோதனை செய்த சுங்க அதிகாரிகள், 822 அட்டைப்பெட்டிகளில் காணப்பட்ட ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 400 சிகரெட்டுகளை (164,400) பறிமுதல் செய்துள்ளனர்.
அதன் பெறுமதி ரூபா 98 இலட்சத்து 64 ஆயிரம் (ரூ. 9,864,000) என கணக்கிடப்பட்டுள்ளதாக லால் வீரகோன் தெரிவித்தார்.
அதற்கமைய 1,464 அட்டைப் பெட்டிகளில் காணப்பட்ட 292,899 சிகரெட்டுகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவற்றின் பெறுமதி ஒரு கோடி 75 இலட்சத்து 68 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. (ரூ. 17,568,000
சுங்கத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
Add new comment