பொதுஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர்கள் மீது புகார்
அநுராதபுரம், ஹொரவபொத்தானை பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி இன்றையதினம் (17) ஹொரவபொத்தானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஹொரவபொத்தானை பிரதேச செயலகத்தினால் மக்களின் காணிப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலான காணி கச்சேரி இன்றைய தினம் (17) இடம்பெற்றது.
அதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் ஆவணங்களை கிராம உத்தியோகத்தர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் அங்கு வருகை தந்திருந்த பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் தம்மை பயமுறுத்தி தாங்கள் செய்கின்ற வேலையை மாத்திரம் செய்யுமாறு தெரிவித்ததையடுத்து கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து தமது கடமையில் இருந்து விலகியுள்ளனர்.
இதன் காரணமாக காணி கச்சேரிக்காக வருகைதந்த பிரதேச மக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாக பிரதேச செயலாளர் ஊடாக கிராம சேவகர்கள் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளனர்.
ஹொரவபொத்தானை பிரதேச சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களான நிலந்த ஹெட்டியாராச்சி, மற்றும் சௌமியா செனவிரத்ன என்பவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்ள்ளது.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
Add new comment