கனடா, பிரிட்டன் வளர்ச்சிக்கு கைகொடுத்த தமிழ் மக்கள்

இருநாட்டு பிரதமர்களும் வாழ்த்து

தமிழர்கள் அனைவருக்கும் நேற்றுமுன்தினம் தைப்பொங்கல் தினத்தன்று தனது திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

'வணக்கம்' என்று தனது உரையைத் தொடங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடைத் திருவிழாவான தைப்பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் பண்டிகை அறுவடைத் திருநாளாகவும், புதிய வருடத்தின் தொடக்கமாகவும் உள்ளது.

இந்தக் கொண்டாடத்தின் போது நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக கூடி சர்க்கரை பொங்கல் செய்து, அந்த ஆண்டின் அறுவடைக்கு நன்றி செலுத்துவர். கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் கனடாவில் உள்ள தமிழர்கள் நம் நாட்டின் வெற்றி மற்றும் செழுமைக்காக ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்போம்" என்று தெரிவித்தார்.

'எங்கள் குடும்பத்தின் சார்பாக சோஃபியும் நானும் தைப்பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார் ஜஸ்டின். இதேபோல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ​ேஜான்சனும் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

"அற்புதமான பிரிட்டன் தமிழ் சமூகமே..." என தன் உரையைத் தொடங்கிய போரிஸ் ​ேஜான்சன், பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு, "மிகவும் சுவையான இனிப்புப் பொங்கலை அனைவரும் சுவைத்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்; அறுவடை நாளை கொண்டாடும் இந்த நாளில் பிரிட்டன் வளர்ச்சிக்காக தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பையும் நான் கொண்டாட விரும்புகிறேன்.

வர்த்தகம், பொருளாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் எங்கள் பாடசாலைகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என அனைவரின் பங்களிப்பும் உண்மையான மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இங்கு குடும்பத்துடன் வாழ்ந்து பணி செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்த நாட்டை தகுதியான இடமாக உருவாக்கியுள்ளீர்கள். எனவே எங்களின் அற்புதமான தமிழ்ச் சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். வரும் ஆண்டு உங்களுக்கு அனைத்து சந்தோஷங்களையும், நன்மைகளையும் இந்த பாரம்பரிய பொங்கல் விழா அளிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார் போரிஸ் ​ேஜான்சன்.


Add new comment

Or log in with...