ட்ரோன் பயன்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் 25ஆம் திகதி உடன் அமுலுக்கு வரும் வகையில், ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை, இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.
நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை விதிக்கப்பட்ட குறித்த தடையை நீக்கியுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற சோதனைகளின்போது சம்மாந்துறை உள்ளிட்ட தீவிரவாதிகள் தங்கியிருந்த இடங்களில் ட்ரோன் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அதன் மூலம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் எனும் அச்சத்தை அடுத்து, குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய ஏற்கனவே உள்ள சிவில் விமானசேவை விதிமுறைகளுக்கமைய, ட்ரோன்களை பயன்படுத்த முடியும் என அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Add new comment