எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது.
நேற்று (16) மாலை ஸ்ரீ.ல.சு.க தலைமையகத்தில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் பொருட்டு கட்சி தொடர்ந்தும் செயற்படும் என, இதன்போது இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், கட்சியின் பல்வேறு எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, அக்கட்சியின் மறுசீரமைப்பு, பெண்கள் மற்றும் இளைஞர் சம்மேளனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.பி திஸாநாயக்க, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா ஆகியோர் தொடர்பில் இடம்பெற்று வரும் ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி கூடி இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment