சீனா மீதான குற்றச்சாட்டை கைவிட அமெரிக்கா முடிவு

சீனா மீதான ‘நாணய மோசடி நாடு’ என்ற முத்திரையை அமெரிக்கா அகற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசலுக்குத் தீர்வுகாணும் முதற்கட்ட உடன்பாடு கையெழுத்தாகவிருக்கும் சில நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிதித் திணைக்களம் ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் நாணய அறிக்கையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அந்த முடிவு வெளியானது.

முதற்கட்ட வர்த்தக உடன்படிக்கையின் ஒருபகுதியாக நாணய மதிப்பை முறைகேடாகக் குறைக்கும் செயல்களில் இருந்து ஒதுங்கியிருக்கச் சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக, நிதித் திணைக்களம் குறிப்பிட்டது.

நியாயமற்ற வர்த்தக இலாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு சீனா தனது யுவான் நாணய மதிப்பை வேண்டுமென்றே குறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குறைகூறிவந்தது.

இப்போது அந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா விலக்கிக்கொள்வதன் மூலம் சீனா பெரிய பலன்களை அடையப்போவதில்லை. இருப்பினும் அது சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா தெரிவிக்கும் முக்கியமான நல்லெண்ண அறிகுறியாகக் கருதப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் சீனா மற்றும் அமெரிக்கா வர்த்தகப் பூசலில் ஈடுபட்டு வருவதோடு இரு நாடுகளும் அடுத்த நாட்டின் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்து வருகின்றன.


Add new comment

Or log in with...