ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்து போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் மாநிலத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏக்கள் சிறப்பு சட்டப்பேரவையை நேற்று காலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. ஒரு சில பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்ததில் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. தற்போதும் ஒரு சில இடங்களில் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் நேற்று காலை அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு வெளியே ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருந்தனர்.

2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்சி / எஸ்டி இட ஒதுக்கீட்டை நீடிக்க அஸ்ஸாம் சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு நேற்று கூடியது. இந்த சமயத்தில் அரசின் கவனத்தை ஈர்க்க ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...