கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் நாளை (14) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (13) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
கடந்த புதன்கிழமை (08) கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை (11) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு இன்று (13) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது..
இம்மோதல் தொடர்பில் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த 12 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அடையாள அணிவகுப்பு தொடர்பில் அவர்களுக்கு இன்றையதினம் (13) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment