இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவிடம் ரொட்டவெவ மக்கள் கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்ன புளியங்குளம், பெரிய புளியங்குளம் காணிகளை மீட்டுத்தருமாறு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவிடம், ரொட்டவெவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாயலுக்கு அவரது நிதியிலிருந்து கட்டடப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) வழங்கிவைக்கப்பட்ட போதே இக் கோரிக்கையை முன்வைத்தனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் கமநெகும, மக நெகும திட்டத்தின் ஊடாக புளியங்குளம் புனரமைக்கப்பட்டதுடன், வீதியும் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புளியங்குளம் பகுதிக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு சென்றால் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் எம்மை அச்சுறுத்தி வருகின்றனர், வழக்குகள் தொடருகின்றனர் என மக்கள் அவரிடம் முறையிட்டனர்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, தற்போதைய ஆட்சியில் அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எமக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அனைத்து இன மக்களுக்கும் சமமாக செயற்படுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேபோல் நான் திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து இன மக்களுக்கும் பாகுபாடின்றி ஒரே விதமாக சேவையாற்றி வருகின்றேன். நான் எனது சேவையை தொடர்ச்சியாக செய்து வருவேன் எனவும் நீங்கள் நான் செய்யும் சேவைக்கு எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் இனிவரும் காலங்களில் நீங்கள் எனக்கு வாக்களித்து இன்னும் பல சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் புஞ்சி நிலமே மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை ரொட்டவெவ கிராமத்தில் மையவாடி புனரமைப்பு பணிகளுக்காக பத்து லட்சம் ரூபாயை வழங்கி உள்ளேன். அத்துடன் பள்ளிவாயலை புனரமைப்பதற்கு இன்னும் பல நிதிகளையும் வழங்குவேன் எனவும் அவர் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் என். எம். அமான், மௌலவி எம். நஸார்தீன், மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் ஏ. எஸ். எம். பைசர் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
Add new comment