தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான விவகாரத்தில்

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று சட்டசபை எதிர்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த பின் இதனை அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் 2ம் நாள் நிகழ்வு நாளான நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கூட்டத் தொடரின் போது, அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். மேலும் தாம் கொடுத்துள்ள தனி நபர் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் எதிராக உள்ளதாக ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

இதையடுத்து ஸ்டாலின் கொடுத்துள்ள தனி நபர் தீர்மானம் ஆய்வில் உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பதில் அளித்தார். ஆய்வில் உள்ள தீர்மானத்தை உடனே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்த முடியாது என்று ஸ்டாலினிடம் சபாநாயகர் கண்டிப்புடன் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல. நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, ஆங்காங்கே கலவரம் துப்பாக்கிச்சூடு என நடைபெறும்போது இதனை பேரவையில் விவாதிக்க வேண்டும். ஆய்வு செய்து தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்ற பொன்னான வார்த்தையை சொல்லிவிட்டால் நாங்கள் திருப்தி அடைவோம், என்றார்.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்காததால் சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்புச் செய்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், மஜக.எம்எல்ஏ. தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர்.

வெளிநடப்புக்கு பின் சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குடியுரிமை சட்டதிருத்த விவகாரத்தில் நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, ஆங்காங்கே கலவரம் துப்பாக்கிச்சூடு என நடைபெறும்போது இதனை பேரவையில் விவாதிக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்க மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம்.

ஜனவரி 2ஆம் திகதி மனு அளித்தோம். இதுவரை மனுவை எடுக்கவில்லை. சட்டசபை இன்னும் 2 நாட்களே நடக்க இருப்பதால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.


Add new comment

Or log in with...