முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
இலங்கை – -இந்திய அணிகளுக்கு இடையில் குவாத்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதல் ரி 20 போட்டி ஆடுகளத்தின் ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்டது.
போட்டியில் நாணயச் சுழற்சி இடம்பெற்றதுடன், அதில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. எனினும், நாணயச் சுழற்சியின் பின்னர் மழை குறுக்கிட, ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னர், மழை ஓய்ந்த போதும், ஆடுகளத்தில் சில பகுதிகளில் மழைநீர் புகுந்ததில், மைதான ஊழியர்கள் ஆடுகளத்தின் ஈரமான பகுதியை உலர்த்துவதற்கு முற்பட்டனர்.
தொடர்ச்சியாக சுமார் 2 மணித்தியாலம் போராடியும், போட்டிக்காக ஆடுகளத்தை தயார்படுத்த முடியவில்லை.
குறிப்பாக ஆடுகளத்தை உலர்த்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது பலனளிக்கவில்லை. எனவே, நடுவர்கள் இரவு 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ரி 20 போட்டி ஆடுகளத்தின் ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்டது.
இலங்கை -– இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ரி 20 போட்டி இன்று 7 ஆம் திகதி இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment