உலகப் போருக்கு வழிவகுத்துள்ள ட்ரம்பின் ஒரேயொரு தீர்மானம்

ஒரு பக்கம் சீனா, ரஷ்யா, ஈரான்; மறுபக்கம் அமெரிக்க நட்பு நாடுகள்

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலைமை ஏற்பட்டால், பெரும்பாலும், ஈரானுடன் சீனா மற்றும் ரஷ்யா கைகோர்க்கும் என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால் மூன்றாம் உலகப் போர் உருவாக வாய்ப்புள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஈரானை அமெரிக்கா மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தி விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஈரான் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. முதற் கட்டமாக ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீதும், ஈரான் தலைவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 14 முக்கிய ஈரான் தலைவர்கள் பலியாகி உள்ளனர். அங்கு நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் இராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார். அதேபோல் ஈரான் இராணுவ கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு போர் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை ஏற்கனவே ரஷ்யாவும், சீனாவும் கண்டித்துள்ளன. 'அமெரிக்காவின் தாக்குதல் விதிகளுக்கு புறம்பானது. இது பெரிய அளவில் பிரச்சினையை உண்டாக்கும். அமெரிக்கா உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும்' என்று சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் குறிப்பிட்டிருந்தன.

அதேவேளை ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது பெரிய யுத்தத்துக்கு வழிவகுக்கும். ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவையும், சவூதியையும் தாக்க நினைக்கும். இது கண்டிப்பாக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஒருவேளை சீனா, ரஷ்யா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் கைகோர்த்தால், இன்னொரு பக்கம் அமெரிக்கா, துருக்கி, சவூதி, சிரியாவின் போராளிப் படைகள் ஒன்றாகச் சேரும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள் மோதினால் மற்ற உலக நாடுகளும் போரில் கைகோர்க்கும். இது சன்னி_ -ஷியா நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையாகவும் மாறும்.

ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த போது அதை சீனா மதிக்கவில்லை. கடைசியில் அமெரிக்கா பல முறை எச்சரிக்கை விடுத்த பின்புதான் சீனா அந்தத் தடையை மதித்தது. ஆனால் ஈரான் மீதான தடையை இப்போது ரஷ்யா பெரிதாக கண்டு கொள்வது கிடையாது.

அதேபோல் ஒரு பக்கம் சீனா_ - அமெரிக்கா இடையே வர்த்தக யுத்தமும் நடந்து வருகிறது. அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா தொடர்ந்து வரியை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவும் சீனாவின் பொருட்களுக்கு விலையை உயர்த்தி வருகிறது. இது போருக்கு உரம் போடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இன்னொரு பக்கம் சீனா, வடகிழக்கு நாட்டில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முயல்கிறது. சீனாவும், ஈரானும் வடகிழக்கு நாடுகளை கட்டுப்படுத்த முயன்று வருகின்றன. அதற்கு இந்தப் போர் ஒரு வகையில் உதவும். ஈரான் மூலம் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தலாம் என்று சீனாவும், ரஷ்யாவும் நம்புகின்றன.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளை கட்டுப்படுத்தினால் , எண்ணெய் வர்த்தகத்தை தனது கட்டுப்படாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று சீனா நம்புகிறது. இதனால் மூன்றாம் உலகப்போருக்கான சூழ்நிலைகள் பிரகாசமாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதியின் ஒரு முடிவானது உலகின் போக்ைகயே மாற்றியுள்ளது என்கிறார்கள் அவர்கள்.


Add new comment

Or log in with...