தரம் 01 அனுமதி; பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண வேண்டும்

வடமாகாண கல்வி அமைச்சுக்கு அவைத் தலைவர் கடிதம்

தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காணுமாறு கோரி வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

2020ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்றுக்கான அனுமதி தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக பலர் எமக்கு முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 10 அல்லது 11 பேர் வரை கல்வித் திணைக்களத்தால் 2019 டிசம்பர் ஆரம்பத்தில் வெளியிட்ட அனுமதிப்பட்டியலில் தமது பிள்ளைகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் 2019.12.31ஆம் திகதி இரண்டாவது பட்டியல் ஒன்று வெளியிடப்பட்ட போது தங்களது பிள்ளைகளது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பட்டியலின் படி தாங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடசாலைக்குச் சென்று அனுமதியை உறுதி செய்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

சிலர் தமது விண்ணப்பத்தில் தெரிவு செய்த இரண்டு பாடசாலைகளின் பட்டியல்களிலும் தமது பிள்ளையின் பெயர் காணப்பட்ட போது அதில் ஒன்றினைக் கைவிடுவதாக அறிவித்தும் உள்ளனர். அப்படியானவர்கள் இரண்டு பாடசாலைகளையும் இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

முதலாவது பட்டியலில் அனுமதி வழங்கப்பட்ட போது அந்தந்த விண்ணப்பங்கள் முறையானவை என்று ஏற்றுக்கொண்டு அனுமதியளித்த கல்வித் திணைக்களம்,வருடக் கடைசியில் ஏதோ காரணத்துக்காக அப் பெயர்களை நீக்குவதானது எங்கேயோ தவறு நடந்துள்ளமையைக் காட்டுகின்றது.

குறித்த பாடசாலைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தமது பிள்ளைகளுக்குத் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்து முடித்த பின்பு அதனை நிராகரிப்பது அப் பிஞ்சுஉள்ளங்களில் ஆழமான ஏமாற்றத்தைப் பதிவுசெய்வதாகவும், அவர்களது மனோநிலையைப் பாதிப்பதாகவும் அமையும்.

ஏதோ காரணங்களுக்காக சிலரின் பெயர்களை உள்ளடக்க வேண்டிய தேவை பின்னர் ஏற்பட்டிருப்பின், ஏற்கனவே பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்காமல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் கோராத பாசாலைக்கு சேர்க்கிறோம் என்றால் விண்ணப்பமுறைமையே கேள்விக்குறியாகி விடுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் எவரையும் பாதிக்காத வகையில் தீர்மானம் அவசியமாகின்றது. அந்தவகையில் முதலாவது பட்டியலில் அனுமதி வழங்கப்பட்டவர்களை அப்படியே தொடரவிட்டு, புதிதாக உள்ளடக்கப்பட்டவர்களை ஒரு விசேட காரணியாக மேலதிக அனுமதியாக வழங்கி பிரச்சினைக்குத் தீர்வகாண முடியும்.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...