முஸாதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த கிழக்கு ஆளுநர்

திருமலை ஸாஹிறா மகா வித்தியாலயத்தில் இருந்து உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 2ஏ,பி சித்தியைச் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற எப்.எம். முஸாதிகாவை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் மூதூர் சாபிநகர் இல்லத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (02) மாணவியின் இல்லத்திற்கு சென்ற ஆளுநர் மாணவியின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்களுடன் கல்வியின் மூலம் இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும், பல்கலைக்கழக கல்வியில் மாணவி முஸாதிகா கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பான கற்றல் பற்றியும் கலந்துரையாடியதோடு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். குடும்பத்தார்களுடன் தாம் வாழும் தற்போதைய நிலை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

எதிர்கால கல்வி உயர்வுக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, தமது மாணவியின் கல்விக்கு தேவையான மடிக்கணனி ஒன்றும் முஸாதிகாவிற்கு ஆளுநரினால் வழங்கி வைக்கப்பட்டது.

(மூதூர் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...