மட்டக்களப்பில் 2019இல் 2,218 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை 2,218பேர் டெங்குத் தாக்கத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த டிசம்பர் 20ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 27ஆந் திகதிவரையும் 182பேர் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை 2,218பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். 

இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 36டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆரையம்பதி 38பேர், களுவாஞ்சிகுடி 28பேர், செங்கலடி 17பேர், ஏறாவூர் 16பேர், வாழைச்சேனை 13பேர், காத்தான்குடி 11பேர், பட்டிப்பளை 06பேர், ஒட்டமாவடி 06பேர், வவுனதீவு 03பேர்,கோரளைப்பற்று மத்தி 03பேர்,வாகரை 02பேர், கிரான் 02பேர்,வெல்லாவெளியில் ஒருவர் என்ற வகையில் இனங்காணப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தேங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...