ஹெலிகொப்டர் விபத்தில் இரு விமானிகள் உட்பட நால்வர் பலி

பெண்ணொருவர் காயம்

பதுளை மாவட்டம் ஹப்புத்தளைபிரதேசத்தில் இன்று (03)காலை 9.20 மணியளவில் விமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரவில பகுதியில் இருந்து இரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமான படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளை தம்பபில்ல மாவத்தை பிரதேசத்தில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் இரண்டு விமானப்படை வீரர்களும் மற்றும் கண்காணிப்பாளர்கள் இருவரும் இருந்ததாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான பின்னர் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் சம்பவ இடத்திற்கு ஹப்புத்தளை பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

(ஹற்றன் சுழற்சி  நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன்)         

 


Add new comment

Or log in with...