குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர், திடீரென உயிரிழந்தமைக்கு சிகிச்சைக்காக வழங்கப்பட்ட இரசாயனத்தின் தாக்கமே காரணம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
ஒரு வார காலத்துக்குள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஐவர் உயிரிழந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (23) வைத்தியசாலையின் டயாலிசிஸ் பிரிவுக்கு சீல் வைத்து தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் பின்னணியிலுள்ள காரணத்தை கண்டறிய மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் சுகாதார அமைச்சும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, டயாலிசிஸ் மற்றும் இரத்தம் செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு வைத்தியர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால நடவடிக்கை எடுத்துள்ளார்.