—நிகழ்நிலைப் காப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அண்மையில் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிடம் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பிலே மேற்கண்ட விடயத்தை அவர், எடுத்துரைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போலியான தகவல்கள், வெறுப்புப்புப் பேச்சுக்கள், உள்ளிட்ட சமூக ஊடகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முரண்பாடான விடயங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கக் கொண்டே நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த சட்டத்தில் காணப்படும் சில உட்பிரிவுகள் சம்பந்தமாக பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா, தமது கரிசனைகளை வெளிப்படுத்தினார். இதன்போது அரசாங்கம் இச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை தெளிவு படுத்தியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
விசேடமாக, சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சிவில் அமைப்புக்களின் பரிந்துரைகளையும் உள்ளீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்தும் எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.