இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் அவுஸ்திரேலிய குடியுமையை பெற்றுள்ளார். டில்ஷான் குடியுரிமையை பெற்றதை அடுத்து அது தொடர்பில் அவுஸ்திரேலிய எம்.பி. ஜேசன் வுட் சமூக ஊடகத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
“இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் இலங்கை தேசிய அணியின் முன்னாள் தலைவருமான திலகரத்ன டில்ஷானின் பங்கேற்புடன் இன்று குடியுமை வழங்கும் நிகழ்வு அதிக சிறப்பாக இருந்தது” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒரு புதிய அவுஸ்திரேலியர் மற்றும் உள்ளூர் குடியிருப்பாளராக அவர் உள்ளூர் அணி ஒன்றில் இணைந்து சமூகத்துடன் தமது திறமையை தொடர்ந்து பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது மகள் ரெசான்தியும் தனது தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றுவது சிறந்ததாக உள்ளது என்றும் அவர் கூறினார். அவுஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடியுரிமை சோதனை ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமான வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.