மாத்தறை மாவட்ட செயலக நிகழ்வில் சாகல ரத்னாயக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று இரண்டு வாரத்துக்குள் நாட்டில் நீதி மற்றும் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்ததுபோல், நாடு முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அவரால் முடிந்துள்ளது. குறிப்பாக எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப் பொருட்களில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு சம்பந்தமான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி அலுவலக பிரதானியுமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம் பெற்ற 2024ஆம் வருட வரவு – செலவு திட்ட யோசனைகள் சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் , மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதை கவனத்திற் கொண்டு அதற்கான முடிந்த உபகாரங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த சர்வதேச மட்டத்தினூடாக வேலைத் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் “அஸ்வெசும” வேலைத்திட்டத்தை அமுல்படுத்தியமை. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மீண்டும் போசாக்கு பொதிகள் உட்பட முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான நிவாரண கொடுப்பனவுகளும் இன்று வழங்கப்படுகின்றன. பாடசாலை மாணவர்களின் போசணை குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவைகளை எதிர்காலங்களில் தொடர்ந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோல், உல்லாசத் துறையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது எமது நாட்டுக்கு கூடுதலான உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த வருடம் 14,89,000 உல்லாசப் பயணிகள் வந்துள்ளனர். இத்தொகை கடந்த வருடத்துக்கு முன்புள்ள வருடத்தை விட இரட்டிப்பாகும். எமது நாட்டுக்கு 2017ம் ஆண்டு தான் கூடுதலான உல்லாசப் பயணிகள் வந்துள்ளனர். இதன் எண்ணிக்கை 25 இலட்சமாகும். அடுத்த வருடங்களில் இதை விட பன்மடங்கு உல்லாசப் பயணிகள் வருகை தரும் நாடாக அமையும். இந் நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலிகமகே, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
(வெலிகம தினகரன் நிருபர்)