லக்சல புதிய காட்சியறைக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அமைச்சர்
“லக்சல – எல்ல” புதிய காட்சியறைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் எல்ல ரயில்வே நிலையத்தில் இடம் பெற்றது . லக்சல நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படும் இக்கட்டடத்தின் தரைத்தளம் பொது வாகன நிறுத்துமிடமாகவும், மேல் தளம் லக்சல காட்சியறையாகவும் பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம், இலங்கை கைவினைப் பொருட்கள் சபை மற்றும் லக்சல ஆகியவற்றின் கூட்டு திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தேசிய மற்றும் இலங்கையின் கைவினைப்பொருட்கள், மற்றும் வீடு சார்ந்த சுயதொழில் உற்பத்தியாளர்களுக்கும் புதிய சந்தையை உருவாக்கவுள்ளது . பதுளை மாவட்டம் மற்றும் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்களின் படைப்புகளுக்கு விசேடமாக இங்கு இடம் ஒதுக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், அரசாங்கத்திற்குச் சொந்தமான இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் லக்சல நிறுவனம் ஆகியவை இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஐந்து வீதம் ரயில்வேக்கு வழங்கப்படும்.சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் லக்சல காட்சியறை நிர்மாணிக்கப்படவுள்ளதால், இலட்சக்கணக்கான கைவினைஞர்களுக்குப் பிரதேசத்திலும் நாடு முழுவதும் புதிய சந்தை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.