இலங்கையின் இறையாண்மையை ஆதரிப்பதற்கு அமெரிக்கா உதவுமென, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.
இந்தோ – பசிபிக் மூலோபாயம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்க அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு விசேட படகுகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் கரையோர எல்லைகளில் கண்கானிப்பு நடவடிக்கைக்கு உதவும் கிங் விமானத்தையும் அமெரிக்கா வழங்வுள்ளது.
இந்தோ – பசிபிக் கடல்சார் கள விழிப்புணர்வு முயற்சியின் மூலம், தெற்காசியா உட்பட பரந்த பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு நிகழ்நேர வணிக செயற்கைக்கோள் தரவை அமெரிக்கா வழங்கும்.
கடற்கொள்ளையர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் ஆகியவற்றால் நாடுகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு பெற
இந்த திட்டம் உதவும்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பொருளாதார மீட்சி தொடர்பான இலங்கையின் சமீபத்திய முன்னேற்றம் குறித்தும் அவர் பாராட்டினார்.