கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் கல்வியாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், சமூகசேவையாளர், செனட்டர், கொழும்பு சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் ஆகிய வகிபாகங்களை வகித்தவராவார். கலாநிதி அஸீஸின் 50 ஆவது நினைவுதின சொற்பொழிவு கடந்த சனிக்கிழமை கொழும்பு சாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபத்தில் அஸீஸ் மன்றத்தின் தலைவர் காலித் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலாநிதி அஸீஸ் அவர்கள் பற்றி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்ட கல்விலாளர் பேராசிரியர் எம்.சொர்ணராஜா பிரதான உரையாற்றினார்.
அத்துடன் பொறியியலாளர் ஏ.ஜி.ஏ. பாரி (சர்வதேச திட்டத்தின் ஆலோசகர்) மற்றும் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் மற்றும் அரப் நியூஸ் ஆங்கில மொழி சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹமட் ரசூல் டீன், வை.எம்.எம். ஏ தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட், வை.எம்.எம்.ஏ முன்னாள் தலைவர் சஹிட் எம். றிஸ்மி ஆகியோரும் உரையாற்றினார்கள்..
இந்நிகழ்வில் சிங்கள மொழியிலான சிங்கள_ முஸ்லிம் ஒற்றுமை பற்றிய நூலை நுாலாசிரியர் தேசமான்ய எம்.டி.டி. பீறிஸ் பேராசிரியர் சொர்ணராஜாவிடம் கையளித்தார். அத்துடன் அசீஸ் பற்றி பேராசிரியர் எம். ஏ நுஹ்மான் எழுதிய நூலை கலாநிதி அசீஸின் மகன் முஹம்மது அலி அசீஸ் பிரதம பேச்சாளர் சொர்ணராஜாவிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் கலாநிதி அசீஸ் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள், அசீஸ் மன்ற உறுப்பினர்கள், வை.எம்.எம்.ஏ உறுப்பினர்கள், ஏ.எச்.எம். பௌசி எம்.பி, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கொழும்பு சாஹிரா கல்லூரியின் அதிபர் றிஸ்னி மரிக்கார் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் சொர்ணராஜா இங்கு உரையாற்றுகையில், “கலாநிதி அசீஸ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ேசவையாற்றியவர். அவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது தந்தை யாழ்ப்பாணம் நகரசபை உறுப்பினராக இருந்தவர். அவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். 1929 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் கற்று இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார்.1933 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு தொடர்வதற்காக இங்கிலாந்து சென்றார்.
அசீஸ் அவர்களின் மகன் அலி அசீஸும் நானும் கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பப் பிரிவில் தமிழ்மொழி மூலம் கல்வி கற்றோம். அசீஸ் முஸ்லிம் சமூகத்தில் பல கல்வியியலாளர்களை உருவாக்கினார். அரபுத் தமிழ் போன்ற மொழிகளில் அவர் பாண்டியத்தியம் பெற்றார். கிழக்கு மாகாணத்தில் விபுலானந்த அடிகளாருடன் இணைந்து தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தப் பாடுபட்டார்.
அசீஸ் 1940 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்தார். கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாஹிரா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார். 1950 மற்றும் 1960களில் செனட் சபை உறுப்பினராகவும், பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை (வை. எம். எம். ஏ) அமைப்பைத் தோற்றுவித்தார். அவர் பல நுால்களை எழுதியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
அஷ்ரப் ஏ சமத், ஏ.எஸ்.எம். ஜாவிட்...?