தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பது போன்று மாசி மாதத்திற்கும் பல சிறப்புகள் உள்ளன. மாசி மாதத்தை கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்லுவதுண்டு. மாசி மாதம் இறை வழிபாட்டிற்கும், தான தர்மங்கள் செய்வதற்கும் ஏற்ற மாதமாக சொல்கிறார்கள். மாசி மாதத்தில் பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை மாசி மகம் என கொண்டாடுகிறோம். இந்த சிறப்புமிக்க நாளில் என்னென்ன காரியங்களை செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கி, அளவில்லாத புண்ணிய பலன்களை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாசி மகத்தன்று செய்ய வேண்டியவை :
மாசி மகத்தின்று அனைத்து நீர் நிலைகளிலும் அமிர்தம் கலந்திருப்பதாக ஐதீகம். இதனால் கடல், புனித நதிகள் ஆகியவற்றில் இந்த நாளில் நீராடுவது சிறப்பானது. இந்த நாளில் புனித நீராடினால் தெரிந்தும், தெரியாமலும் நாம் செய்த பாவங்கள் விலகும். சுபிட்சம் பெருகும். புனித நதிகளில் நீராட முடியாதவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவில் குளங்களில் நீராடி இந்த பலன்களை பெற முடியும்.
மாசி மகத்தன்று அன்னதானம் வழங்குவது மிகவும் சிறப்பானதாகும். முடிந்த வரை இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் வழங்கலாம். மனிதர்களுக்கு உணவு வழங்க முடியா விட்டாலும் காகம், நாய், பூனை போன்றவற்றிற்கும் உணவு வழங்கலாம்.