ஒரு தேசிய அரசின் தோரணையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன ஒன்றிணைந்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு எங்களது ஆதரவு கிடைக்குமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்துள்ளார்.
சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கிய கண்டி, மடவளை பஸார் பிரதேசத்தில் தனியார் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘எக்சன்’ உள்ளக விளையாட்டரங்கின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் என்ற நிலைமை காணப்படுமாயின், நாம் ஓர் அங்கமாக இருக்கும் எமது ஐக்கிய மக்கள் சக்தி தமக்கான பெரும்பான்மைகளை சுவீகரித்துக் கொள்ளும் வகையில், பல முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிவருமென தெரிவித்த தலைவர் ரவூப் ஹக்கீம், தேர்தலுக்கு பின் எல்லா கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்வதுதான், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைக்கு தீர்வாக அமையுமென தான் நம்புவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இன்று இருக்கின்ற பாராளுமன்ற சமன்பாட்டை வைத்து ஒரு தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்க முடியாது. ஏனெனில் இன்று பாராளுமன்ற நிலைப்பாடு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சமன்பாடாகும். இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தேசிய அரசாங்கம் என்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், பெரும்பான்மை உள்ள ஒரு அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் மக்கள் ஒருபோதும் திருப்தி காணப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (16) மாலை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் திலின பண்டார தென்னகோன், ஹிதாயத் சத்தார் அகில இலங்கை மொத்த மற்றும் சில்லறை வியாபார சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எம். நஜீம் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.