சர்வதேச கால்பந்து சம்மேளன கால்பந்து தொடரின் இலங்கை வலயத்தின் முக்கோண தொடரில் இலங்கை எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி பப்புவா நியுகினியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி அன்றைய தினம் இரவு 8.45 மணிக்கு ரீட் மாவத்தை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை ஏற்று நடத்தும் இந்தத் தொடர் அன்றைய தினம் 3.30 க்கும் நடைபெறும் பூட்டான் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகிறது.
இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் மொத்தம் நான்கு போட்டிகளே உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி மார்ச் 25 ஆம் திகதி தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும். அன்றைய தினம் பிற்பகல் 3.30க்கு மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் பபுவா நியுகினி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8.45 மணிக்கு இலங்கை மற்றும் பூட்டான் இடையில் நடைபெறும் போட்டியுடன் தொடர் நிறைவடையவுள்ளது.
உலகக் கிண்ண கால்பந்து (2026) தகுதிகாண் சுற்றின் ஆரம்ப சுற்றிலேயே தோல்வியுற்ற அணிகளுக்கு இடையில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் முதல் முறை அறிமுகம் செய்த தொடரின் கீழ் முதல் தொடராக இலங்கையில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
எவ்வாறாயினும் தொடரின் சம்பியன் அணி ஒன்று தேர்வு செய்யப்படுவதில்லை என்பதோடு பரிசளிப்பு நிகழ்வும் நடத்தப்படாது. எனினும் இதில் அதிக புள்ளிகளைப் பெறும் இரு அணிகளும் மற்றொரு தொடருக்காக பரிந்துரைக்கப்படுவதாக இலங்கை கால்பந்து சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.