முன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை கைது செய்து வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்ட மாஅதிபர் டப்புல்ல டி லிவேரா பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதன்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி குமார சேனாரத்ன, செட்டிக்குளம் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் ரொஹான் சஞ்சீவ, பொலிஸ் அத்தியட்சகர்களான ஹரிஸ் சந்திர பண்டார மற்றும் அஜித் பிரியதர்ஷன ஹேரத் ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவுக்கு எதிராக இலங்கை தண்டனை சட்டக் கோவை பிரிவு 298கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாகவும் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில், ஜயமினி புஸ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார்.

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட சிலர் மன்னார் நோக்கிப் பயணித்த போது, செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிலேயே குறித்த 6 பேரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...