இரணபாலை புதுக்குடியிருப்பு பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தோண்டிய 6 பேர் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின்படி, இரணபாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்த 06 பேர் புதுகுடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இடத்தில் தண்ணீர் எடுப்பதற்காக கட்டப்பட்ட கிணற்றின் அருகில் 03 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழியொன்றை தோண்டிக்கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி,மதவாச்சி,பதவியா,தெய்நதர,ஹக்மான போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் சான்று பொருட்களையும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)