Friday, March 29, 2024
Home » யாழ். முற்றவெளி சம்பவம் அங்கஜன் MP அறிக்கை
'இதுவல்ல யாழ். மக்களின் அடையாளம்'

யாழ். முற்றவெளி சம்பவம் அங்கஜன் MP அறிக்கை

ஏற்பாட்டாளர்கள் விளக்கமளிக்க வேண்டும்

by damith
February 12, 2024 7:45 am 0 comment

வடக்கில் பெரும் முதலீட்டை ஏற்படுத்தும் நோக்கில் தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனால் யாழில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்டிருந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் முறையான விதத்தில் கையாலாமையே அங்கு ஏற்பட்ட குழப்ப நிலைக்குக் காரணமென அரசியல் மற்றும் சமூக தரப்புகளில் இருந்து அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். முற்றவெளியில் நடைபெற்ற Hariharan Live in Concert and Star Night தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலிருந்தும் அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அதனூடாக முதலீடுகள் கொண்டுவரப்படுவதும் வரவேற்கப்பட வேண்டியதாக இருந்தாலும், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயங்களில் நெகிழ்வுப்போக்கு இருக்கக் கூடாது. இசைநிகழ்வில் இடம்பெற்ற அசாதாரண நிலை என்பது முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்தால் கட்டுப் படுத்தக்கூடியதாகவே இருந்திருக்குமென பலர் குறிப்பிடுகின்றனர்.

நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்புகள், நுழைவுச்சீட்டுகளினால் ஏற்பட்ட குழப்பங்கள், பங்கேற்கும் கலைஞர்களில் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மைதான ஏற்பாடுகள், பாதுகாப்பு சார் குறைபாடுகள் என பல்வேறு சர்ச்சைகள் நேற்றைய குழப்பத்தின் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. மறுபக்கத்தில் நிகழ்வை பார்வையிடச் சென்ற மக்களை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலும் சிலர் விமர்சிக்கின்றனரென்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களில் சிலர் செய்த பிழைகளை ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்கள் மீது திருப்புவதென்பது திட்டமிட்ட அரசியலாகவே தென்படுகிறது.

தவறிழைத்த மக்களை நான் கண்டிப்பதோடு, மண்ணுக்கு வருகை தந்திருக்கும் விருந்தினர்களை சங்கடப்படுத்தாமல் பார்த்துக்கொள்வதும் எமது மரபுசார் பண்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

ஆக்ரோசமான மனநிலையில் இருக்கும் மக்களை கையாள்வது என்பது தனித்துவமான ஆளுமைத்திறன். அதிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் முற்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிந்திருந்த போது அதற்கான ஏற்பாடுகள் மிகக் கச்சிதமாக செய்யப்பட்டிக்க வேண்டும்.

யாழ். மாநகரசபை, பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூடுதல் பொறுப்போடு நடந்திருக்க வேண்டும், அவர்களுக்கான சரியான தகவல்களை ஏற்பாட்டாளர்கள் வழங்குவதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக அறிந்துகொண்டேன். இத்தகைய பணிகளில் முன் அனுபவம் இல்லாத மாணவர்களைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கையாள எடுக்கப்பட்ட முடிவு என்பது மிகவும் ஆச்சரியமானதாகவும் தவறான முன்னுதாரணமாகவும் அமைகிறது.

ஏற்பாடுகளில் செய்யப்படும் தவறுகள் பெரு நிகழ்ச்சியொன்றின் முடிவை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பதற்கு இந்த இசைநிகழ்ச்சி ஓர் உதாரணமாகி விட்டது என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துகள், குறிப்பாக “யாழ்ப்பாணம் வர யாருக்கும் விருப்பமில்லை. நாம் சமாளித்து வர வைத்துள்ளோம்…” உள்ளிட்ட கருத்துகளின் தாக்கமும் இந் நிகழ்வில் தாக்கத்தை செலுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் சொல்ல வந்த கருத்து வேறாக இருக்கலாம், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் தொனிகள் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT