கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பைந்தமிழ்ச்சுடர்.சி.சுதாகரனின் “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் (07) பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன் தலைமையில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து சிறப்பித்தார். வரவேற்புரையை எண்ணம் போல் வாழ்க்கை இலக்கிய மன்றத் தலைவர் எழுத்தாளர் கனகதீபகாந்தனும், நூலாசிரியர் பற்றி சமூக சேவைத்திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எழுத்தாளர் இரா.கி.இளங்குமுதனும், நூல்பற்றிய சிறப்பு நயவுரையை ஓய்வுநிலை அதிபர் கவிஞர் இரா.இரத்தினசிங்கமும் வழங்கிவைத்தனர்.
‘எண்ணம்போல் வாழ்க்கை’ இலக்கியமன்றத்தின் ஒருங்கமைப்பில், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் எழுத்தாளருமான சூ.பார்த்தீபன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கிராமத்தின் மரபுகள், சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை இளைய தலைமுறையினருக்கு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த யோசனையாக இவரது கவித்துவம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபைச் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், திருமலை வளாக முதல்வர், கிழக்கு மாகாண கலைஞர்கள் ,கலை ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(தம்பலகாமம் குறூப் நிருபர்)