மருத்துவர்கள் தவிர்ந்த இலங்கையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ரூ.35,000 கொடுப்பனவு கோரி இன்று (13) காலை முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்கள் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைச் சங்கத்தின் வடமாகாண தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம் கருத்து தெரிவிக்கையில்,,,
இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் போது எமது கோரிக்கையை அவர்கள் உதாசீனம் செய்ததன் காரணத்தினால் நாங்கள் இன்று காலை 6.30 மணி முதல் நாடு முழுவதும் சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைச் சங்கம் உள்ளடங்களாக 72 தொழில் சங்கங்களின் தலைவர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
இப் போராட்டமானது அப்பாவி மக்களுக்கு எதிரானது இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்களும் வருந்துகின்றோம்.
எங்களை அரசாங்கம் அரச சேவையாளர்கள் என கருதாத நிலையிலே இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாங்களும் அரச சேவையாளர்கள். இச்சேவைக்கு நாங்களும் முக்கியமானவர்கள் என்பதை காண்பிப்பதற்காகவே ஒன்றிணைந்த சுகயீன விடுமுறை போராட்டமாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வருவதா? அல்லது தொடர்ந்து முன்னெடுப்பதா? என்பது குறித்து உரிய அதிகாரிகள், அமைச்சர்கள் எமது தலைவர்களுடன் கலந்துரையாடி சாதகமான பதிலை வழங்க வேண்டும். இல்லை என்றால் எமது போராட்டம் தொடரும்.
பொதுமக்களாகிய உங்களுக்கு ஒரு விடையத்தை கூற விருப்புகின்றோம். இப்போராட்டத்தை மக்களுக்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கவில்லை.
நாட்டின் அரசாங்கம் எமது கோரிக்கையை உரிய முறையில் செவிமடுக்காத காரணத்தினால் எங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் குறூப் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்