இலங்கை முழுவதிலுமிருந்து 44 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் போது மலையகத்திலிருந்து சுமார் 2500 பேர் செல்ல வேண்டும். ஆனால், இப்போது 700 பேர் வரை தான் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். நாங்கள் கல்வியில் முன்னேறி விட்டோம் என்று கூற முடியாது என மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினரும் பேராசிரியருமான ரி. தனராஜ் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 விக்னேஸ்வரா ஆரம்ப பிரிவு பாடசாலைக்கான இரண்டு மாடி புதிய கட்டடம் (11) வைபவ ரீதியாக பாடசாலை அதிபர் ஏ. ஜெயசுந்தரம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஆரம்ப பிரிவு ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் ஒரு பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வந்த பாடசாலையில் கல்விகற்று கொழும்பில் வர்த்தகராக இருக்கின்றவர்கள் இணைந்து 3 கோடியே 50 லட்சம் ரூபா செலவில் இரண்டு மாடி கட்டடம் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
விழாவுக்கு வருகை தந்திருந்த பிரதம அதிதிகள் பசுமலை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இருந்து மேல வாத்திய இசை முழங்க அழைத்துவரப்பட்டு மாணவர்களின் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றி விழா ஆரம்பமாகியது.
இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தது. அத்தோடு இப்ப பாடசாலைக்கு நிதி உதவி வழங்கியவர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மலையக மக்கள் இன்றும் ஏழைகளாகவே இருக்கின்றனர். ஆகவே இந்த கட்டடம் அமைத்திருப்பது மிகவும் உயரிய செயல்.
இன்று மலையகத்தை பொருத்தவரையில் பல்வேறு துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உயர் பதவிகளில் எம்மவர்கள் இருக்கின்றனர். ஆகவே நாங்கள் கல்வியில் மிக வேகமாக செல்ல வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளன என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
ஹட்டன் விசேட நிருபர்