இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பகிர்ந்தளித்து இணக்கப்பாட்டுடன் செயற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் தெரிவான பொதுச்செயலாளர் குகதாசனுடன் முன்னெடுக்கவுள்ள சமரச பேச்சுவார்த்தைகள் குறித்து நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு குறித்து இனிமேல் எந்த வாக்கெடுப்பும் நடைபெறாது.பொதுச் செயலாளர் பதவியை குகதாசன் மற்றும் சிறிநேசன் ஆகியோருக்கு தலா இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்க பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கடந்த (11) நடத்தப்பட்ட பேச்சுக்களில்,முதலாவது தவணையை
யாருக்கு வழங்குவது என்பதிலே இழுபறிகள் உள்ளன. மட்டக்களப்புக்கு முதலாவது தவணையை தருமாறு கோரியிருந்தோம். ஆனால் முதலிரு வருடத்தை திருகோணமலைக் தருமாறு குகதாசன் கோரியுள்ளார். இது குறித்து மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் பேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளேன்.
ஊடகங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என கோரி, கையெழுத்து சேகரிக்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.