சர்வதேச சமூகத்திற்கிடையில் வலுவான உறவுகளை பேணிச்செல்வது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும், அத்தொடர்புகளை எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தினார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடாத்திய இராஜதந்திர வைபவத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அபுதாபியில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் சுமார் 120 தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அஜ்மான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுஐமி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உதவி அமைச்சர் சுல்தான் அல் ஷம்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையில் வலுவான உறவுகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தியதுடன், இலங்கைக்கும் அதன் உலகளாவிய பங்காளிகளுக்கும் நன்மையளிக்கக்கூடிய ஒத்துழைப்புக்கான புதிய சந்தர்ப்பத்தை உருவாக்கினார்.
இந்நிகழ்வில் இலங்கை உணவுகள் சர்வதேச சமூகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் அதிதிகளுக்கு இலங்கை உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது. அதேவேளை, இலங்கையின் பிரபல்யமான நடனக் குழுவான சந்தன விக்கிரமசிங்க மற்றும் நடனக் கலைஞர்கள் சங்கம் பாரம்பரிய இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விழாவை வண்ணமயமாக்க முடிந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இலங்கை புத்துயிர் பெற்று, சவால்களுக்கு மத்தியிலும் சுபீட்சத்திற்கும் வெற்றிக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பாதையில் பயணித்து வருவதாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்ன தெரிவித்தார்.