ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன இவ்வருடம் இடம்பெறவுள்ள நிலையில் இவ்விரண்டு தேர்தல்களுக்கும் 2000 கோடி ரூபா தேவைப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான 1000 கோடி ரூபாவுக்கான மதிப்பீட்டை தேர்தல் ஆணைக்குழு நிதியமைச்சுக்கு வழங்கியுள்ளது.இந்த மதிப்பீட்டு ஆவணங்கள் தற்போது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 இல் முடிவடையும் அதே வேளை, ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. எனினும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் படி பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடைந்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க அரசியலமைப்பு ஏற்பாடுகள் உள்ளன. .
ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் மோசமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்