கல்முனை பிராந்திய சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போஷாக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில்,சிறுவர் போஷாக்கு ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கியவாறு இக்குழு அமைக்கப் பட்டுள்ளது.போஷாக்கு குறைபாட்டை நிவர்த்திப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே,இக்குழு அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
அம்பாரை மாவட்ட செயலகமும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து ஏற்பாடு செய்த இக்கலந்துரையாடல், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீச னும் இதில் பங்கேற்றிருந்தார். சிறுவர்களின் போஷாக்கு நலன்கருதி அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடாத்துதல், சிறுவர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துதல், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முன்பள்ளிகள், பாடசாலைகள், சமூக ரீதியாக போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வுகளை நடாத்துதல், உணவு பாதுகாப்பு உணவு உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தி வீட்டுத்தோட்டம், தோட்ட பயிர்ச்செய்கைகளை ஊக்குவித்தல், பாடசாலைகளில் வழங்கப்படும் சத்துணவு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கம் வழங்கும் போஷாக்கு கொடுப்பனவு திட்டத்தை கண்கானித்தல் பற்றி இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
(பாலமுனை விசேட நிருபர்)