அமரர் டாக்டர் ஏ.எம்.ஏ. அஸீஸ் நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நினைவுச் சொற்பொழிவு என்பன எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.45 க்கு கொழும்பு 10 ஒராபி பாஷா மாவத்தை, இல 406 இல் அமைந்துள்ள சாஹிரா கல்லூரியின் கஃபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
‘இலங்கை முஸ்லிம், தமிழ்த் தலைவர், செனட்டர் அஸீஸின் உரைகளில் சட்டமும் அதன் நிகழ்கால முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எம்.சொர்ணராஜா உரை நிகழ்த்தவுள்ளார். சர்வதேச திட்ட ஆலோசகர் கேப்டன் ஏ.ஜி.ஏ. பாரி மற்றும் கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் எம்.சி. ரசூல்தீன் இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.
கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அறக்கட்டளையின் தலைவர் காலித் எம்.ஃபாரூக் மற்றும் அகில இலங்கை வைஎம்எம்ஏ மாநாட்டின் தேசிய தலைவர் இஹ்சான் ஏ.ஹமீட், ஆகியோர் நிகழ்வுக்கு இணைத் தலைமை தாங்குவர். பேராசிரியர் சொர்ணராஜா தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்றார். அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி (முதல் வகுப்பில்) பட்டம் பெற்றார் மற்றும் சட்ட பீடத்தில் விரிவுரையாளராக இருந்தவர். அமெரிக்காவின் யேல் சட்டக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் (எல்.எல்.எம்) லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் எல்.எம் மற்றும் கலாநிதி பட்டங்களையும் பெற்றார்.
இவர் தஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் சட்டக் கலலூரியின் தலைவராக பதவி வகித்தவர். ஓய்வு கால விடுப்பின் போது அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான சர்வதேச சட்டம் தொடர்பான புத்தகத்தை எழுதினார். இது இந்தத் துறையில் அவரது புகழை நிலைநிறுத்தியது.