இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடிக்கும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கைக் கடற்படை ஒருபோதும் தாக்குதல் நடத்தவில்லை என இலங்கை கடற்படையினர் தெரிவிக்கின்றனர். கடற்படையின் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய அது தொடர்பில் தெரிவித்த போது; இந்திய கடற் தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து இனம் தெரியாதவர்களால் தாக்கப்படுவதாகவும் அவர்களது மீன்பிடி படகுகளை தாக்கி சேதப்படுத்துவதாகவும் தமிழகத்திலிருந்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை கடற் படை முற்றாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் தினமும் நூற்றுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் கடற்படையினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் அது சாத்தியப்படாத போதே இந்திய மீனவர்கள் சிலர் கைது செய்யப்படுகின்றனர். அதன் போது கடற் படையினர் அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தவில்லை. அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களது அத்துமீறல் நடவடிக்கைகள் இலங்கை மீனவர்களுக்கு பாதகமாக அமைவதாலேயே இலங்கை கடற் பரப்பிலிருந்து விலகி தொழிலை மேற்கொள்ளுமாறு தமிழக மீனவர்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறலாம். எனினும் அது நிச்சயம் எமது கண்காணிப்பில் இடம்பெறுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்