2024 ஜனவரி மாதத்தில் மாத்திரம் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு 11.4 வீத உயர்வடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுற்றுலாப் பயணத் துறையை குறிப்பிடும்போது தற்போது பெப்ரவரி மாதத்தின் முதல் 08 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை வந்துள்ளனர். 2024 இல் இதுவரை 2,68,375 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே 42,768 பேர் வருகை தந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 39,914 சுற்றுலா பயணிகளும், பிரிட்டனிலிருந்து 22,278 சுற்றுலா பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 18,016 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்