ஹிஜ்ரி 1445 புனித ஷஃபான் மாத பிறை நேற்று முன்தினம் சனிக்கிழமை (10) தென்படவில்லை என பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. சஹ்பான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு 10ஆம் திகதி சனிக் கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறை தென்படாத காரணத்தினால் புனித ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நேற்று 11ஆம் திகதி ஞாயிற்று கிழமை மாலை மஃரிபுடன் ஷஃபான் மாதத்தை ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் பிறைக்குழு என்பன உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நிர்வாகிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுவின் உப தலைவர் மௌலவி அஹமட் ஸாஹ் தலைமையில் இடம் பெற்றிருந்தது.
இதன் பிரகாரம் புனித பராஅத் இரவு (ஷஃபான் 15ஆம் இரவு) 2024.02.25ஆம் திகதி ஞாயிறு மாலை (திங்கள் இரவு) அனுஷ்டிக்கப்படும் என்றும் ஹிஜ்ரி 1445 ரமழான் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஷஃபான் பிறை 29வது நாளாகிய 2024.03.11ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கூடும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு தினகரன் நிருபர்