அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவான பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் வரி மூலமான நிதியிலேயே குடிநீர் திட்டம் உள்ளிட்ட கிராமிய மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசாங்கம் பாரியளவு நிதியை ஒதுக்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு சர்வதேசமும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சர்வதேச ரீதியில் எமது நாடு மீதான நம்பிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சர்வதேசத்துடன் இணைந்து செயல்படாமல் எம் போன்ற நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது அசௌகரியமான விடயமாகும். நாட்டின் சுற்றுலாத்துறை தற்போது சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.போராட்ட காலத்தில் 25 சுற்றுலாப் பயணிகள் கூட நாட்டுக்கு வராத நிலையில் தற்போது சுற்றுலாத்துறை சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது.
அந்த வகையில் ஒரு டொலர் கூட கையிருப்பில் இல்லாத இந்த நாட்டில் தற்போது 4.4 பில்லியன் டொலர்கள் கையிருப்பில் காணப்படுகிறது.
இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவான பொருளாதார வேலைத்திட்டத்தின் பயனாகும்” என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்