ஜனாதிபதிக்கு SLPP மதுர விதானகே பாராட்டு
சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு தேவையான வகையில் இந்த நாட்டில் செயற்படுவதற்கு இடமளிக்காத ஜனாதிபதியின் ஆளுமை தொடர்பில் மகிழ்ச்சியுற முடியும் என பொதுஜன பெரமுன எம்.பி. மதுர விதானகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நேற்றையதினம் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் மக்களின் வாழ்க்கை சிறப்பாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
முன்னேற்றமடைந்து வரும் பொருளாதார நிலையை மேலும் முன்னேற்றுவதற்காக வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையை முன்னேற்றும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் புதிய கல்வி மறுசீரமைப்பு மூலம் இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை மிகச் சிறந்ததாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் கட்டம் கட்டமாக பலமடைந்து வருகின்றது. அந்த வகையில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய வேலைத்திட்டங்களில் பங்களிப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்