மிரிஹான வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மிரிஹான பிரதேசத்தின் ஜூபிலி மாவத்தை, மிரிஹான பகுதியிலுள்ள வீடொன்றில் பல நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, வீட்டின் அறையொன்றின் கட்டிலில், சில நாட்களுக்கு முன்பு இறந்த ஆண் ஒருவரின் சடலமும், அதன் சமையல் அறையில் நிர்வாணமான நிலையில் பெண் ஒருவரின் சடலமும் இருப்பதையும் கண்டுள்ளனர்.
மேற்படி வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனவும், கணவனுக்கு 80 வயது என்றும் மனைவிக்கு 96 வயது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சடலங்கள் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு, நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.