Friday, April 19, 2024
Home » தோட்டக் கம்பனிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜனாதிபதியின் பணிப்புரையை செயற்படுத்த

தோட்டக் கம்பனிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

by sachintha
February 9, 2024 7:21 am 0 comment

ஜனாதிபதியின் ஆலோசகர் வடிவேல் சுரேஷ் எம்.பி.

 

நாட்டின் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி அது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய பணிப்புரைகளையும் வழங்கியுள்ள போதும், தொழில் அமைச்சும் தோட்டக் கம்பெனிகளும் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த 200 வருடகாலமாக ஐந்து பரம்பரையாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு கடுமையாக உழைத்தவர்கள் மலையக மக்கள். இந்த மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தீவிரவாதத்திற்கோ அல்லது நாட்டை அழிப்பதற்கோ ஒருபோதும் செயற்படவில்லை என்பதை குறிப்பிட வேண்டும். இந்த நாட்டை ஆண்ட ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் தார்மிக பொறுப்பு இருந்தது. அது இந்த நாட்டுக்காக உழைத்த மலையக மக்களை கௌரவிக்கும் பொறுப்பு. அவர்களுக்கான உரிய அந்தஸ்தை வழங்கும் பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு அரசாங்கங்களுக்கும் உரியது. அது தவறவிடப்பட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கான வீடமைப்பு, அவர்களுக்கான காணி உரிமை, தொழில் வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் என அவை முறையாக வழங்கப்படாமல் பல்வேறு குறைபாடுகளுடனே அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது தேசிய மட்டத்தில் காணி உரிமை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை மலையகத்துக்கும் விஸ்தரிக்குமாறு நான் அரசாங்கத்தையும் காணியமைச்சரையும் கேட்டுக்கொள்கின்றேன். மலையகத்தில் எந்தத் தொழில் அல்லது எந்தத் துறையை சார்ந்தவர்களாகினும் சரி அவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு சொந்தமான காணி உரிமையை வழங்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வின் காலத்திலேயே இது வழங்கப்பட வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT