மனித வாழ்வில் பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. தவிர்க்க இயலாததும் கூட. ‘மனிதர்களே! பூமியில் பயணம் செய்யுங்கள். அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் குற்றவாளிகளின் இறுதிநிலை என்னவானது என்பதைச் சிந்தியுங்கள்.’ (அல்குர்ஆன் 27:69)
பயணிக்க பயணிக்க ஒருவனுடைய ஆன்மா மணம் பெறும் என்பது மாத்திரமல்ல, அவனுடைய குணமும் சீர்பெறும் என்பது அறிஞர் பிஷ்ரியின் கூற்று.
ஐரோப்பா கண்டத்திலுள்ள ஹங்கேரியைச் சேர்ந்த லியோபோல்ட் வைஸ் (Leo Bold Weise) என்பவர் யூத மதத்தைச் சேர்ந்தவர். உலக நாடுகளை வலம் வந்தவர். இஸ்லாமிய நாடுகளில் பயணித்த போது அவர் கண்ட காட்சிகள் அனுபவங்கள் அவருடைய மனதையும் குணத்தையும் மாற்றின.
ஒரு கட்டத்தில் அவர் இஸ்லாத்தைத் தழுவி முஹம்மத் அஸாத் என பெயர் பெற்றார். ‘மக்காவை நோக்கிய பயணம்’ என்ற நூலும் ‘குர்ஆனின் செய்தி’ என்ற குர்ஆன் விரிவுரையும் அவரது நூற்களேயாகும்.
மக்காவை நோக்கிய பயணம் அவரது ஆன்மாவை பரிசுத்தப்படுத்தியது. ‘உலகம் ஒரு சிறந்த புத்தகம் போன்றது. வீட்டை விட்டு வெளியேறி வெளி உலகை காணாதவன் அந்த புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை கூட திறந்து பார்க்காதவனைப் போன்றாவான்’ என்கிறார் ஓர் அறிஞர்.
எனவே நாடு, நகரம், கிராமம் என்றில்லாமல் பயணங்களை மேற்கொண்டு அல்லாஹ்வின் ஆற்றல்களையும் அற்புதங்களையும் அருளையும் அறிய வேண்டும். குறிப்பாக நாம் மாத்திரமல்லாமல் நம் பெற்றோர் மனைவி மக்கள் உறவினர்கள் போன்றவர்களையும் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் படைப்புக்களைப் பார்வையிடச் செய்ய வேண்டும். பலதரப்பட்ட மனிதர்களையும் சந்திக்கச் செய்ய வேண்டும். அவற்றின் ஊடாக சிந்தனையை விரிவாக்கமடையும். மனிதர்களைப் படிப்பதற்கு பயணம் மிக அவசியமானது. அதை பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக பொது மருத்துவமனையொன்றுக்கு நமது சிறுவர், சிறுமியருடன் சென்று, அங்கு நோயாளர்கள் அனுபவிக்கும் வேதனைகளை நாமும் அவர்களும் கண்கூடாகப் பார்க்க வேண்டும். அதன் ஊடாக வாழ்வின் துன்பங்களையும் வேதனைகளையும் எம்மால் உணரவும் முடியும். அவர்களுக்கு உணர்த்தவும் கூடியதாக இருக்கும். இதேபோன்று உணவு உற்பத்தி பயிர்ச்செய்கை பிரதேசங்கள், கால்நடை வளர்ப்பு பண்ணைகள் உள்ளிட்ட அனைத்தையும் நேரில் பார்வையிடும் போது அல்லாஹ்வின் ஆற்றல்களையும் அற்புதங்களையும் தெளிவாகக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும். அவை நிச்சயம் இறைநம்பிக்கையை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.
தொகுப்பு:
ஜத்து மைஸரா அப்துல் காதிர்…