இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன் எனப்படும், தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தத் தடையும் கிடையாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே, வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இலங்கை, இந்தியா என இரு நாடுகளிலிருந்தும் சாந்தன் நாடு திரும்புவது தொடர்பான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் அவர், நாடு திரும்புவதில் எந்தவித தடையும் கிடையாது. இது தொடர்பில் அரசாங்கம் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்போவதில்லை. அதற்கிணங்க சாந்தனுக்கு எச்சந்தர்ப்பத்திலும் நாடு திரும்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேவேளை,முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தனை, விரைவாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சாந்தனை நாட்டுக்கு திருப்பியழைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.